கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கைக் குறிப்புகள் - 05

Thursday, March 22, 2018

நான் கொழும்பில் சென்றிறங்கிய இரண்டாம் நாளில், யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதைப் பற்றி எடுக்கப்பட்ட 'எரியும் நினைவுகள்' திரையிடப்பட இருந்தது. ஆவணப்படத்தை எடுத்த சோமீயும், எனது மற்ற நண்பர்களும் யாழிலிருந்து கொழும்பிற்கு இதற்காய் வந்திருந்தனர்.
நான், போல், இரவி எல்லோரும் சேர்ந்து மாலைத் திரையிடலுக்காகப் போவதாய்த் தீர்மானித்திருந்தோம். இடையில் நண்பர் போல், லக்சலவில் சில பொருட்களை வாங்க வேண்டுமென்றார். அக்காவின் வீட்டில் நின்ற என்னைக் காரில் ஏற்றிக்கொண்டு வந்த டிரைவர் அங்கிளுக்கு, நெரிசலுக்குள் லக்சலவைக் கண்டுபிடிப்பது கஷ்டமாயிருந்தது. 'அக்காவிடம் சொல்லப்போவதில்லை, உண்மையைச் சொல்லும், எதிரேயிருந்த விஹாரமகாதேவிப் பூங்காவில் உமது பழைய சிங்களக்காதலியைத்தானே சந்திக்கப் போகின்றீர்' என்பதாய் அவரின் பார்வை கேட்பதுபோல எனக்குத் தோன்றியது.
முன்வாசலில் இருந்த கஃபேயில் காற்றில் கேசம் அலையப் பேசியபடி இருந்த சிங்களப்பெண்களைக் கண்டவுடன், லக்சலவைக் கண்டுபிடிக்க பட்டகஷ்டமெல்லாம் எங்கோ ஓடி ஒளிந்திற்று. போன கொஞ்சநேரத்தில் மழையும் பெய்யவும் தொடங்கியது. கொழும்பின் மொன்சூனை, இந்த அழகிய 'ஆம்பல்களு'டன் இரசிக்கின்றேன் என்றாலும், அதைச் செவிமடுக்காது கனடாவிற்குக் கொண்டுபோக ஒரு புத்தர் சிலை வாங்குவதற்காய் என்னை போல் உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
'எரியும் நினைவுகள்' ஒரு நிறைவான நிகழ்வாக நடந்துமுடிந்தது. தர்மசிறி பண்டாரநாயக்கா இதை ஒழுங்குசெய்திருந்தார். திரையிடல் முடிந்தபின் அவரோடு சற்று நேரம் உரையாட முடிந்திருந்தது இதமாக இருந்தது. எனது கவிதைத் தொகுப்பை கனடாவில் வெளியிட்டபோது அவரது குறும்படத்தையும் திரையிட்டேன் எனவும் அவருக்குக் கூறினேன். நாம் தொலைவிலிருந்து பார்க்கும் ஆளுமைகளை நேரில் பார்க்கும்போது பதற்றத்தில் சிலவேளைகளில் என்ன பேசுவது என்பதும் தெரிவதில்லை. இதே நிகழ்விலேதான் சோமீயின் நண்பனான வசந்தவையும் சந்தித்தேன். வசந்தவோடான நட்பு பிறகு நான் இலங்கையில் நின்றபோது கொழும்பைச் சுற்றிப் பார்த்தல், நீர்கொழும்பு, காலி போன்ற பல இடங்களுக்குச் சேர்ந்து பயணித்தல் என்று நீண்டது.
அடுத்தநாள் காலையில் யாழ்ப்பாணத்திற்குப் போவதாக திட்டமிடப்பட்டிருந்தது. போலும், இரவியும் எனக்கான ரெயின் ரிக்கெட்டை வரும்போதே வாங்கிக்கொண்டும் வந்திருந்தனர். திரையிடல் முடிந்தபின் வசந்த, சோமீ உள்ளிட எல்லோரும் ஒரு மதுபான விடுதியிற்குப் போயிருந்தோம். நள்ளிரவின் பின்னாலும் நாரஹன்பிட்டிச் சந்தியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தோம். அருகிலிருந்த பொலிஸ் ஸ்டேஷனை எல்லாம் முன்னொருகாலத்தில் எப்படியெல்லாம் பயத்தோடு கடந்திருக்கின்றேன் என யோசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, வசந்த தன் காதல் கதைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
விடிகாலையில் கோட்டையிலிருந்து வவுனியாவிற்கான ரெயினைப் பிடித்தோம். தற்செயலாய் ரெயின் ஸ்ரேஷனில் இங்கிலாந்திலிருந்து வந்திருந்த கீரனைச் சந்தித்தோம். ஏதோ ஒரு தடங்கலினால் இரெயின் வவுனியா வந்துசேரக் கொஞ்சத் தாமதம் ஆனாலும், நண்பர்களோடு கதைத்துக்கொண்டு வந்த இந்தப் பயணம் நிறைவாக இருந்தது. யாழுக்கு ரிக்கெட் வாங்கியிருந்தாலும் வவுனியாவில் இடைநடுவில் இறங்கியதற்கு, இரவி தனது இயக்ககால நண்பர் ஒருவரைச் சந்திக்க விரும்பியிருந்தார் என்பதே காரணம்.
ஒருவகையில் அது நல்லதாகப் போய்விட்டது, அவரோடு வவுனியாவில் 19வது நாளாக நடந்துகொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்ணாவிரதப் போராட்ட இடத்திற்குச் சென்றோம். இரவியும் அவரது தோழரும் அந்த மக்களின் துயரங்களை அருகில் இருந்து கேட்டார்கள். எதுவுமே செய்யவியலாத கையாலாகத்தன்மையுடன், இவ்வாறான விடயங்களைக் கேட்பது மிகுந்த அவதி தருமென்பதால் நானும், போலும் சற்றுத் தொலைவிலேயே நின்றோம்.
அப்போது பாடசாலை முடிந்து எங்களைக் கடந்துபோன சின்னப்பிள்ளைகள் போல் தமிழ் பேசுவதைக் கண்டுவிட்டு, 'இஞ்ச பாருங்களடா வெள்ளைக்காரன் தமிழ் பேசுகின்றான்' என்று வியந்தார்கள். நான் 'இல்லை இவரொரு தமிழாள்' என்று அவர்களுக்கு விளங்கப்படுத்தப் பெரும் கஷ்டமாய்ப் போய்விட்டது.
பிறகு நாங்கள் அந்தத் தோழரோடு முல்லைத்தீவில் நடந்துகொண்டிருந்த மற்றொரு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காய் போராட்டம் நடந்த இடத்திற்குப் போனோம். போகும் வழியில் தேக்குகளால்(?) அடர்ந்து இருபுறமும் நிரம்பியிருந்த காட்டைக் காட்டி, இது புலிகள் தங்கள் காலத்தில் வளர்ந்தவை என்றார். பிளாஸ்டிக்கை தடைசெய்வதிலிருந்து, மரங்களைத் தேவையில்லாது தறிக்காமை, வெட்டினாலும் மீள்நடுகை என்பவற்றில் புலிகள் இயக்கம் மிகுந்த கவனத்தில் இருந்தது எனச் சொன்னால் ஒரு கூட்டம் புலிகளா எனப் பாய்ந்துவரும். ஒவ்வொரு இயக்கமும் என்ன நல்லதல்லாதவற்றைச் செய்தார்களோ அப்படியே நிறைய நல்லதையும் செய்திருக்கின்றார்கள் என்று கூறவரும்போது, நிதானமாகக் கேட்க எவருக்கும் பொறுமையில்லை என்பதுதான் ஒருவகையில் நம்முடைய அவலம்.
ன்று மாலையே மன்னாருக்கு ஒரு கூட்டத்திற்கு அந்தத் தோழருக்குப் போகவேண்டியிருந்தது. இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியைக் காட்டுகின்றேன் என்று எங்களைக் கூட்டிச் சென்றார். எங்கள் எவருக்கும் அங்கே போவது உவப்பான விடயம் இல்லையென்றாலும் அவருக்காகச் சென்றோம். வட்டுவாகல் பாலத்தைக் கடந்தபோது மக்கள் எப்படி இந்தத் தண்ணீருக்குள்ளால் இறங்கிவந்தார்கள் எனச் சொன்னார். பின்னர் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு அருகில் போகும்போது, எப்படி இந்தக் குறுகிய நிலப்பரப்பில் இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தார்கள் என்று சுட்டிக்காட்டினார் . வெட்டவெளியாக, பனை வடலிகள் சிறிதாக இருந்த பிரதேசத்தில் மிக அண்மையில்தான் மாபெரும் ஒரு அழிவு நடந்ததை நினைக்கச் சில்லிட்டது. அங்கேயிருந்து வெளியேற வேண்டும் போல மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. வாகனத்தோடு உள்நுழைந்த நம்மை காவலுக்கு நின்ற இராணுவமும் நிறுத்தி வைத்து விசாரித்தது.
அங்கிருந்து பின்னர் இலங்கையின் மேற்குக்கரையான மன்னாரை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். இரவிக்கும், அவரது தோழருக்குமாய் அவர்களது நண்பர்கள் காத்திருந்தார்கள். நானும் போலும் அவர்கள் எல்லோரையும் பேசவிட்டு, ரோட்டில் அந்த இரவில் நடக்கத் தொடங்கினோம். பசிக்கவும் தொடங்க அருகிலிருந்த கடையில் பிஸ்கெட்டும், வாழைப்பழத்தையும் வாங்கிக்கொண்டு வந்து மூடியிருந்த ஒரு கடையின் குந்திலிருந்து பேசிக்கொண்டிருந்தோம். ரோட்டால் போய்க்கொண்டிருந்த சனம், வீட்டை விட்டுத்துரத்தப்பட்ட இரண்டுபேர் இதில் குந்தியிருக்கின்றார்கள் போன்ற பார்வையுடன் எங்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
இரவு மீண்டும் வவுனியா திரும்பியவுடன் விடுதியில் பசியோடு கொத்துரொட்டிக்கு ஓடர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தோம். அவர்கள் கொத்துரொட்டிக்குள் ஒரு tomato sauce போத்தலையே கொட்டிவிட்டுக் கொண்டு வந்திருந்தார்கள். 'தம்பிமார் இப்படியா கொத்துரொட்டி செய்வது?' எனத் தந்தவர்களிடம் கேட்டோம். எனக்கு அப்படிப் பசி கொஞ்சம் சாப்பிட்டேன், மற்றவர்கள் பெரிதாக அதைச் சாப்பிடவில்லை.
அம்மாச்சி உணவகம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தோம். அடுத்தநாள் காலையில் எழுந்தவுடனேயே ஓட்டோ பிடித்துக்கொண்டு வவுனியா அம்மாச்சியில் சாப்பிட்டோம். மிக நன்றாக இருந்தது. பெண்களால் நடத்தப்ப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த உணவகம் நல்லதொரு முன்னுதாரணம். அதன்பிறகு கிளிநொச்சி நோக்கி சில நண்பர்களைச் சந்திக்கப் புறப்படத் தயாரானோம்.
(Jan 26, 2018)

0 comments: