கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கைக் குறிப்புகள் - 01

Saturday, December 02, 2017

சந்திப்பு 01 & 02
அ.யேசுராசாவின் படைப்புக்களைப் பற்றி நெடுங்காலத்திற்கு முன்னர் அறிந்திருந்தபோதும், அவரது 'குறிப்பேட்டிலிருந்து' என்கின்ற பத்தி எழுத்துக்களின் தொகுப்பு வெளிவந்தபோதுதான் முதன்முதலாக நாம் அறிமுகஞ்செய்து கொண்டிருக்கவேண்டும். கொழும்பிலிருந்து நண்பரொருவரினூடாக அவர் அந்த நூலை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
என்னைப் போன்ற நிறையப் பேர், எங்கள் வலைப்பதிவுகளில் உற்சாகமாய்த் தொடர்ந்து எழுதியும், உரையாடிக்கொண்டிருந்த ஒரு காலம் அது. 'தமிழ்மணம்' வலைதிரட்டி பிரபல்யமாய் இருந்து, எழுதும் எங்களை அந்த நாட்களில் ஒன்றிணைத்திருக்கின்றது. அப்போது நடந்த விவாதமொன்றில் நண்பரொருவர், 'நீ அலை யேசுராசாவின் வாரிசாக மட்டுமே வரக்கூடியவன்' என்று எரிச்சலில் ஒரு புதுப் பட்டஞ்சூட்டினார். வேறு ஒன்றுமில்லை, 'நீங்கள் புதிதாய் எதையும் கற்றுக்கொள்ள விரும்பாது, ஒரு வறட்டு மரபு மார்க்சியவாதியாக இருக்கின்றீர்கள்' என அந்த நண்பரோடு தனவியதுதான் இந்தப் பட்டஞ்சூட்டலுக்குக் காரணம். எழுத வரும்போது நாமே நமக்கு எத்தனையோ புனைபெயர்களை வைத்துக்கொள்கின்றோம். அதுபோல பிற நண்பர்களால் இப்படியாக கோபத்தில் சூட்டப்படும் பட்டப்பெயர்களையும் விருப்பி ஏற்கவேண்டியதுதான்.
அ.யேசுராசா எனக்கு தனிப்பட்டு அனுப்பிய தொகுப்பின் காரணமாக, நெகிழ்ந்து அன்றையகாலத்தில் எழுதிய ஏதோ ஒரு பதிவை அவருக்கு காணிக்கை செய்திருந்தேன். 'அ.யேசுராசாவிற்கு...' என்று எழுதியதோடு ஏதோ வேறு சிலவற்றையும் அந்தக் காணிக்கையில் எழுதியிருந்தேன். பிறகு சற்று அதிகப்படியாக இருப்பதாய் அந்தச் சிறுபகுதியை நீக்கியபோது, நம்மைவிட்டு இளவயதில் ஈழநாதன், டிசே அது என்னவென வியாக்கியானம் கேட்டு எழுதியதும், அந்த நாட்கள் நகைச்சுவையாகக் கழிந்ததும் இனிய நனவிடைதோய்தல். இன்றிருக்கும் 'நூலகம்' தொடங்குவதற்கு உந்துசக்தியாக ஈழநாதன் இருந்ததுபோல, அ.யேசுராசா நண்பர்களுடன் திரையிடல்கள் செய்தபோது அவர்களுக்கென சொந்தமாக வாங்கிய புரஜெக்டருக்கும் ஈழநாதன் உதவிபுரிந்ததாகவும் நினைவு இருக்கின்றது.

னடாவில் நண்பர்களுடன் சேர்ந்து இலக்கியம் சார்ந்து உரையாடுவதற்காய் 'சுடருள் இருள்' என்ற நிகழ்வை நாங்கள் தொடங்கியபோது, நிகழ்வில் அ.யேசுராசாவின் 'குறிப்பேட்டிலிருந்து' தொகுப்பை எடுத்துப் பேச நாங்கள் விரும்பினோம். அரசியல் தளத்தில் செயற்பட்டு சலிப்புற்று எல்லாவற்றிலுமிருந்து ஒதுங்கியிருந்த மீராபாரதியைக் கொண்டு அந்த அறிமுகத்தை நிகழ்த்தியுமிருந்தோம். பின்னர் இலங்கையிற்கு 2012ல் சென்றபோது, அ.யேசுராசாவைச் சந்திக்க விரும்பியபோதும், எனக்குத் தரப்பட்ட தொலைபேசி இலக்கத்திலிருந்து அவரைத் தொடர்புகொள்ள முடியாதிருந்தது. இறுதியில் யேசுராசா கனடா வந்துதான், நான் அவரைச் சந்திக்கவேண்டும் என்று விதியிருந்திருக்கின்றது போலும். ஒரு நிகழ்வின் பொருட்டு கனடா வந்திருந்த யேசுராசாவை, நண்பர்கள் நாங்கள் ஒருநாள் 'கடத்திக்கொண்டு' போய் பூங்காவில் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பின்னர் சென்றவருடம் இலங்கை சென்றபோது, எப்போதும் அவரது நூல்களில் வாசித்து என்னை ஈர்த்துக்கொண்டிருந்த அந்த அழகான பெயரான '1ம் இலக்க ஓடைக்கரை வீதி' வீட்டிற்குப் போயிருந்தேன். கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்களுக்கு மேலாய் உரையாடிக்கொண்டிருந்திருப்போம். பிற விடயங்கள் எதிலும் பூச்சியம் என்றாலும், ஓரளவு வாசிப்பவன், திரைப்படங்களைப் பார்ப்பவன் என்பதால் அவை பற்றி யாரோடும் கதைக்க முடியும் என்று நம்புகின்றவன் நான். அந்த நினைப்பும், அ.யேசுராசா தான் பார்த்த திரைப்படங்களையும், வாசித்த புத்தகங்களையும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியபோது கரைந்துபோகத்தொடங்கியது. 
இவ்வளவு நிறையத் தெரிந்தவர் முன் நிகராய்ப் பேசுவதற்கு எனக்கு எதுவுமே தெரியாதென்ற வெட்கமே என்னைச் சூழ்ந்துகொண்டது. தான் அனுபவித்ததைப் பகிர்ந்ததோடல்லாது கொழும்பில் எங்கு இந்தத் திரைப்படங்களை, புத்தகங்களை வாங்கலாமென்றும் திசைகளைக் காட்டிக்கொண்டிருந்தார். அன்றைய மாலை, எவரோ ஒருவரினது குறும்படம் பார்க்க வரச்சொல்லியிருந்ததாய் அவர் தன்னைத் தயார்ப்படுத்த, நான் புறப்படத் தொடங்கினேன்.

சந்திப்பு 03
இம்முறை யாழ்ப்பாணத்தில் எனது நூல் வெளியீட்டைச் செய்ய விரும்பியபோது, நூல் பற்றியல்லாது ஒரு பொதுவான உரையை எங்கள் முன்னோடிகளிலிருந்து கேட்கவேண்டுமென எனக்கு விருப்பமிருந்தது. அப்படி செய்வதற்குப் பொருத்தமானவர் யாரென்று யோசித்தபோது, உடனே நினைவுக்கு வந்தவர் அ.யேசுராசா. ஏதாவது ஒரு தலைப்பில் உங்களுக்குப் பிடித்தமான வகையில் உரையாற்றுங்கள் என கேட்டபோது, அவர் தற்போது இவ்வாறான நிகழ்வுகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகியிருக்கின்றேன் எனத் தெரிவித்தார். அவரது தெரிவை மதிக்கின்றேன் எனக்கூறிவிட்டு இயன்றால் நிகழ்விற்கு வந்தால் மகிழ்ச்சியெனச் சொன்னேன்.
யாழிற்கு வந்தபோது நாங்கள் தங்கியிருந்த விடுதியும் குருநகரிலேயே இருந்தது. வாழ்ந்த ஊர், (பாழடைந்த) வீடு இருக்கின்றபோதும் ஓர் அந்நிய இடமாகவே யாழ்ப்பாணம் இப்போது வந்துவிட்டது என்பது சோகமான விடயந்தான். அப்படி குருநகரில் தங்கிநின்றபோது அ.யேசுராசாவின் ஊரும் அதே என்பதால், எங்கேயாவது பேசப்போவோம் என அவர் தனது மோட்டார்சைக்கிளில் வந்தார். அவரின் வண்டியில் பின்னால் நானிருக்க, நாங்கள் பண்ணைக் கரைக்குப் போனோம். சென்ற வழியில் எப்படி முன்னர் இவையெல்லாம் இருந்தன், இப்போது இந்த இடங்களெல்லாம் எப்படி மாறிவிட்டதெனச் சொல்லிக்கொண்டு வந்தார். ஏ.ஜே, எம்.ஏ.நுஃமான் போன்ற நண்பர்களுடன் தான் பேசிக்கொண்டிருந்த பண்ணைக் கடற்கரையின் நினைவுகளென நனவிடைதோய்தலில் அவர் போய்க்கொண்டிருந்தார். எம்.ஏ.நுஃமானின் 'நேற்றைய மாலையும் இன்றைய காலையும்' எழுதப்பட்ட சூழலை, தேநீர் அருந்திக்கொண்டு அந்த நண்பர்களோடு நடது பேசித்திரிந்த காலங்களென யேசுராசா என்னோடு பகிர்ந்தவை இனிமையான நினைவுகள். இருட்டாகியபோது பண்ணைக் கடற்கரையிலிருந்து வெளிக்கிட்டு நான் நின்ற விடுதியில் இருந்தும் பேசினோம். கிட்டத்தட்ட நான்கைந்து மணித்தியாலங்களுக்கு மேலாய்ப் பேசியிருப்போம் என நினைக்கின்றேன்.
எனது நூல் வெளியீட்டு நிகழ்விற்கு வருவாரா இல்லையா எனத் தெரியாதபோது, அந்தக் காலையில் அங்கே அவர் வந்திருந்தது எதிர்பாராதது. அந்த மகிழ்ச்சியை, அவரைக் கொண்டு எனது நூலை வெளியிட்டு கொண்டாடிக் கொண்டேன்.
ஒரு கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, பத்தியெழுத்தாளராக யேசுராசாவின் பயணம் நீண்டது. அதுமட்டுமின்றி 'அலை', 'திசை' போன்றவற்றிலும், 'மரணத்துள் வாழ்வோம்', 'பதினொரு ஈழத்து கவிஞர்கள்' போன்ற நூல்களைத் தொகுத்தவர்களில் ஒருவராகவும், அவரது பங்களிப்பு மறக்கமுடியாதது. அவ்வப்போது உறங்குநிலைக்குப் போனாலும், தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்துக்கொண்டு இயங்கிக்கொண்டேயிருப்பவர். அண்மையில் அவரது 'நினைவுக் குறிப்புகள்' தொகுப்பு வெளிவந்தும் இருக்கின்றது.
சில விடயங்களில் கறாரானவர் என்றும், நெருங்குவதற்கு அவ்வளவு எளிதானவர் அல்ல என்றும் யேசுராசா பற்றி வெளியில் ஒரு பொதுவான அபிப்பிராயம் இருந்தாலும், அவரோடு பேசும் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம், அவ்வாறில்லை எளிதாய் நெருங்கி அவரோடு உரையாடலாம் என்ற எண்ணமே எனக்குள் வந்தது. தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிரவேண்டும் என்ற பெருவிருப்பமே அவரிடமே மேலோங்கியிருந்ததை ஒவ்வொருபொழுதிலும் நான் அவதானித்திருக்கின்றேன்.
எனதும், எனக்குப் பின்னும் இருக்கின்ற தலைமுறைகள், நிறையக் கற்பதற்கும், எப்படி சோர்வின்றி கலை/இலக்கியம் சார்ந்து செயற்படுவது என்பதற்கும் அவரிடம் நிறைய விடயங்கள் இருக்கின்றன. யேசுராசாவும், எங்களைப் போன்ற தலைமுறைகளிடம் அவ்வப்போது வெளிப்படும் பொறுமையின்மையை, மூத்தவர் என்றவகையில் சகித்துக்கொண்டு திரைகளை விலக்கி, எங்களை நோக்கி இன்னும் நெருங்கி வரவேண்டுமெனவும் பிரியப்படுகின்றேன்.
இறுதியாக எனக்கு பிடித்த அவரது கவிதைகளில் ஒன்று:

பிறகு...
பிறகென்ன, எல்லாம்முடிந்ததுதான்,
'எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி'
சிலுவையி லெழுந்த ஏசுவின்குரலாய்
அவளின் முன்னால்,
அவனின் முன்னால்
நினைவினி லெழுந்த குரலொலியெல்லாம்
இற்று இற்றே மறைவதும்காணாய்.
நீண்டுவிரிகிற பாலை வெளியில்
எந்தப்பசுந்தரை தேடியலைவாய்?
ஒதுங்கிக்கிடக்கிற தனித்த தீவில்
எந்தப்படகைக் காத்தும் இருக்கிறாய்?
'எல்லாம் எப்போ முடிந்த காரியம்.'
14.1.1975
(நன்றி: 'அறியப்படாதவர்கள் நினைவாக' தொகுப்பு)
----------------------

Oct 14, 2017.
(ஓவியம்: றஷ்மி)

0 comments: