கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'நட்சத்திரம்' - ஒரு புத்தக வாசிப்பு

Friday, November 18, 2016

'ட்சத்திரம்' என்கின்ற இந்நாவல் ரஷ்ய (அன்றைய சோவியத் யூனியன்) உளவுக்காரர்களைப் பற்றியது; 2ம் உலகமகாயுத்தத்தில் ஜேர்மனியரைத் துரத்தியடிக்கின்ற காலத்தைய கதைக்களன்.  ஒரு யுத்தத்தில் ஜேர்மனியர்கள் பின்வாங்கி, பெரும் தாக்குதலை ரஷ்யப்படைகள் மீது நடத்த காடுகளுக்குள் பதுங்குகின்றனர். ரஷ்ய உளவுப்படையோ ஜேர்மனியர்களின் தடங்களைத் தவறவிட்டுத் தேடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் அதிகாரியோ கோபத்தில், அம்மாவின் பால் மறவாக் குழந்தைகள் எனவும், பெண்களைத் துரத்துவதைப் போல ஜேர்மனியர்களைத் துரத்தும் கோழைகள் எனவும் அவர்களைப் பார்த்துத் திட்டுகின்றார்.

அவமானங்களை மீறி வேவுப்படையினர் ஜேர்மனியரின் அமைவிடங்களைக் கண்டுபிடிக்கின்றனர். முள்ளுக்கம்பி வெட்டி உள்ளே நுழைகின்ற உளவுப்படையின் ஒருபகுதி திரும்பியே வராது போகின்றது. இதற்கிடையில் யுத்தக் காலத்தில் தொலைத்தொடர்பில் பணியாற்றுகின்ற பெண்ணுக்கு உளவுப்படையின் இளம்தலைவன் மீது காதல் வருகின்றது. மிகவும் அமைதியும், பணியில் தீவிரமும் உடைய அவன் இதை அசட்டை செய்தாலும், அந்தப் படையில் இருக்கும் வீரர்கள் இந்தப் பெண்ணோடு நெருக்கமாகவும், அவளின் காதலை வெற்றிபெறச் செய்வோமெனவும் உறுதியளிக்கின்றனர்.

இறுதியில் இந்த இளம்தலைவன் தலைமையில் முட்கம்பி வெட்டி காடுகளை ஊடுறுத்து, ரஷ்ய உளவுப்படை ஜேர்மனியர்களுக்குள் இறங்குகின்றது. அங்கேயிருந்து அரிய பல தகவல்களை அனுப்பிவைத்தபடியிருக்கின்றனர். சாதாரண ஜேர்மனியப்படை மட்டும் அல்ல, நாஜிக்களின் மூர்க்கமாய்ப் போரிடும் படையணியான எஸ்.எஸும் ஒரு பெரும் தாக்குதலுக்கு அணிவகுத்து நிற்பதை அவதானிக்கின்றனர். தொடர்ச்சியாகத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் சில ஜேர்மனியர்களை இந்த உளவுப்படை கொல்ல, ஜேர்மனியர்கள் சுதாகரிக்கின்றனர். கடும் தேடுதல் நடவடிக்கையில் இவர்களைச் சுற்றிவளைக்க இவர்கள் தாக்கிவிட்டுத் தப்பியோட முயற்சிப்பதோடு நாவல் முடிவடைகின்றது.

அந்தக் காதலி தாங்கள் அனுப்பிவைத்த குழுவிற்குரிய பெயரான 'நட்சத்திரத்திடமிருந்து' தங்கள் தலைமையகமான 'பூமி'க்கு நல்ல செய்தி வருமெனக் காத்திருக்கின்றாள். ரஷ்யப்படை தொடர்ந்து வென்றபடி போகின்றது. போலந்து நாட்டிற்கருகில் -தொடக்கத்தில் உளவுப்படையினரைத் திட்டிய கேணல்- மீண்டும் உளவுப்படையைக் காண்கின்றார். இனி விரைவில் பேர்லினை நாங்கள் பிடித்திடுவோமேன அவர்களை வாழ்த்துகின்றார். ஆனால் அந்தப் பழைய வீரர்கள் இப்போதில்லை. எல்லோரும் புதியவர்கள். அருமையான இளமையான மனிதர்கள் யாரிடையதோ வெறிக்காகவோ நடந்த யுத்தத்தில் காணாமற்போய்விடுகின்றனர்.

ஃதொரு சிறிய நாவலென்றாலும், அதற்குள் யுத்தம் நடக்கும் பின்னணியையும், உளவுப்படைகளின் சவால் நிறைந்த வாழ்க்கையையும் எளிதாக நம்முன்னே கொண்டுவருகின்றது. ஓரிடத்தில் ஒரு ஜேர்மனியரைக் கொல்லும்போது, அவன் 'எனது கைகளைப் பாருங்கள். நானுமொரு தொழிலாளியின் மகன். தொழிலாளர்கள் மீது மிகுந்த காதலுடைய நீங்கள் என்னைக் கொல்லலாமா?' எனக் கேட்கின்றான்.

'திராவ்கினுடைய கண்களில் தோன்றிய இரக்கத்தையும், மாறா உறுதியையும் அந்த ஜெர்மானியன் கண்டான். அவன் ஒன்றுமறியா முட்டாள் அல்ல. அச்சுகோர்க்கும் வேலையிலிருந்து கொண்டே அவன் அநேகப் புத்தகங்களைப் படித்திருந்தான. ஆகவே தன்முன் நிற்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது அவனுக்கு நன்கு தெரியும். இரக்கமும் உறுதியும் கலந்த பார்வையுடைய இவ்வழகிய வாலிபனது உருவத்தில் தனது உயிரைக் கவர வரும் காலனைக் கண்டதும் அவன் கண்ணீர் விட்டழுதான்' என நாவலில் எழுதப்பட்டிருப்பது, எதிரியாயினும் அவர்களது மனதினுள்ளும் கடைசி நேரத்தில் என்ன தோன்றியிருக்கும் என நினைத்து எழுதப்பட்டிருப்பது கவனிக்கத்தது.

இந்நாவலை எழுதிய எம்மானுயில் கஸகேவிச் நிஜவாழ்வில் 'ஸ்கவுட்டுகள்' எனப்பட்ட உளவுப்படையில் இருந்தவர். ஆகவேதான் இந்நூலில் இருக்கும் உளவெடுக்கும் சம்பவங்களை மிக நெருக்கமாக உணரக்கூடியதாக வகையில் அவரால் எழுத முடிந்திருக்கின்றது. மேலும் பக்கங்கள் அதிகம் போகாது மிக நுட்பமாய் நம்மில் கதைகளைக் கடத்தும் இன்றைய இலத்தீன் அமெரிக்கா நாவல்களைப் போல, எப்போதோ எழுதப்பட்ட  இந்த நாவலும் நூறுபக்கங்களுக்குள் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லி நிற்கின்றது.

தமிழில் யார் மொழியாக்கம் செய்தார்கள் என்ற விபரம் தெரியாமல் நியூ செஞ்சுரி ஹவுசினால் 2007ல் இது பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. யாராயினும் இவ்வளவு நுட்பமாய் தமிழாக்கியதற்காய் அவருக்கு நிச்சயம் நாம் நன்றிகூரத்தான் வேண்டும்.


(நன்றி: 'தீபம்)

0 comments: