கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'பிரசன்ன விதானகே: மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி!' யிற்கு ஒரு எதிர்வினை

Wednesday, September 03, 2014


கெளதம சித்தார்த்தனின் 'பிரசன்ன விதானகே: மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி!' சில வாரங்களுக்கு முன்னர் வாசித்தபொழுது, அது குறித்து சிலவற்றை எழுத விரும்பியபோதும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இப்போது எல்லா பரபரப்புக்களும் ஒய்ந்திருப்பதால் அதுகுறித்து சிலவற்றைப் பேசலாம் என நினைக்கின்றேன்.

எனது மதிப்பிற்குரிய நண்பர் கெளதம சித்தார்த்தன் என்றாலும், இத்தகைய விடயங்களில் சமரசம் தேவையில்லை என்பதால் எதையும் மனந்திறந்து உரையாடலாம் என நினைக்கிறேன்.

கெளதம சித்தார்த்தனின் இந்தக் கட்டுரையே கட்டியிருக்கும் மாட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னால், அதைத் தவிர்த்து மிகுதி எல்லாம் எழுதியது போன்ற பாவனையில் எழுதப்பட்டிருக்கின்றது என்பது கவலையான விடயமே.

சரி, இப்போது அவர் சற்று பிரசன்ன விதானகேயின் படத்தைப் பற்றிக் குறிப்பிடும் சில  இடங்களைச் சற்றுக் கவனிப்போம்...

1) "விதானகேவும் with you…. படத்தில் பூடகமாக முன் வைக்கிறார். சிங்கள ராணுவம் அல்லது சிங்களப் பேரினவாதத்தின் குற்ற உணர்வுகளாக முன் வைத்து மன்னிப்பும் கேட்கிறார். சரி Past is Past எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். இனி புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்வோம் என்பது போன்ற ஒரு பார்வையை முன் வைத்துப் பார்க்கிறார்."

கடந்தவை கடந்தவை என்றோ, எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்ற பார்வையோ அந்தப் படத்தைப் பார்த்தபொழுது எனக்கு வரவில்லை. பெரும் போருக்குப் பின்னரான காலத்தை, அதில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை, போர் நிகழாத நிலப்பரப்பில் வைத்து எடுக்கப்படுகின்ற கதையின் பின்னணியை மறந்துவிட்டு சித்தார்த்தன் பார்த்தால் எல்லாமே தலைகீழாய்ப் பார்க்கும் பார்வையே ஏற்படச் செய்யும். இது இன்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்ற இணக்க அரசியலை, தனிப்பட்ட இரண்டு மனிதர்களின் சாதாரண வாழ்வின் மூலம் உடைத்தெறிகின்ற படம். இறுதியில் அந்தப் பெண் செய்கின்ற தற்கொலைகூட ஒருவகையில் சிங்களப் பேரினவாதத்திற்கு/சிங்களவர்களுக்கு கொடுக்கின்ற மிகப்பெரும் தண்டனைதான்.

எல்லாவற்றையும் இழந்தபின் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்ததைப் போல, தன்னிடம் இருக்கின்ற கடைசி துருப்பை அந்தப்பெண்  முன்னாள் இராணுவத்தினனிற்கெதிராகப் பயன்படுகின்றார் என ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? ஏற்கனவே வேறொரு தமிழ்ப்பெண் பாலியல் வல்லுறவிற்குட்பட்டபோது, நடந்ததைச் சொல்லாது தப்பிவந்து குற்றவுணர்வில் துடிக்கின்ற இந்த முன்னாள் இராணுவத்தினனிற்கு இதைவிட எந்தப் பெரிய தண்டனையைக் கொடுத்துவிட முடியும்?

உண்மையில் இந்தக் காலம் தமிழரின் தரப்பு எல்லாவற்றையும் இழந்து கையாலாகாமல் நிற்கும் துயர்மிக்க காலம். சிங்களப் பேரினவாதம் சாதாரண  சிங்கள மக்களையும் ஊடுருவி நிற்கும் காலம். அண்மையில் இலங்கை அரச சார்பாய் இயங்கும் ஒருவர் ஒரு நிகழ்வில் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. 'சந்திரிக்காவின் காலத்தில் சிங்களக் கிராமங்களுக்கு நாங்கள் பயமில்லாமல் நுழைய முடிந்திருந்தது. அங்கே நாம் மேடைகளில் எங்கள் தரப்பு நியாயத்தைக் கூறும்போது யாரும் இடைநடுவில் குழப்பினால் கூட, எங்களைக் காப்பாற்றி அனுப்பிவைக்க மக்கள் இருந்தார்கள். இன்றைய (மகிந்த) காலத்தில் நம்மால்  சிங்களக் கிராமங்களில் சாதாரணமாய்க் கூட உள்நுழைய முடியாது' எனக் கூறியிருந்தார்.

எனவே இன்றைய காலத்தில் நாம் நியாயங்களைப் பேசுவதன் மூலம், அவர்களின் மனச்சாட்சிகளை ஊடுருவவே முடியாது. தமிழர்களுக்கு நிகழ்ந்த பேரழிவுகளின் குற்றவுணர்வைப் பெருக்குவதன் மூலமே சிறு காலடியேனும் இது குறித்து முன்வைக்க முடியும். அதையே பிரசன்னா இப்படத்தில் ஏதோ ஒருவகையில் பார்வையாளர்களின் மனங்களைச் சலனமடையச் செய்கின்றார். அநேகமான சிங்கள மக்களிடையே, 'இப்போதுதானே போர் முடிந்துவிட்டது, புலிகள் அழிந்துவிட்டனர், சமாதானமும் சுபீட்சமும் பெருகுகிறதே' எனற சிந்தனையே இருக்கிறது. அதையே தான் எவ்வளவு அபிவிருத்தி நடந்தாலும், எத்தகைய மாடமாளிகைகள் எழும்பினாலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவ்வளவு எளிதாய் -அது சாதாரண குடும்ப உறவில் கணவன்/மனைவியாய் ஆனால் கூட- நெருங்கிவிட முடியாது என்பதைத்தானே இப்படம் ஒருவகையில் நம்முன் வைக்கின்றது.

(2) "தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றமும் அதன் பண்பாடுகளும் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அதுகுறித்த விமர்சனமேதுமின்றி, அப்படி எதுவும் நடக்காதது போன்ற ஒரு தோற்றத்தைப் படம் முழுக்கக் கட்டமைக்கிறார். படத்தின் பின்புலத்தில் திரும்பிய புறமெங்கும் கந்தசஷ்டிக் கவசமும் தமிழ் கும்தலக்கிடி பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உட்டாலக்கிடி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. போரினால் பெரியளவில் தமிழர்களிடையே மனரீதியாக பாதிப்பு எதுவும் இல்லை; பொருளாதார ரீதியிலான பாதிப்பு வேண்டுமானால் உள்ளது என்கிற தோற்ற மாயையை தொடர்ந்து உருவாக்குகிறார்."

இக்கதை நிகழும் பரப்பு, போர் மிகமோசமாக நடந்த நிலப்பரப்போ அல்லது தமிழர்கள் கணிசமாக வாழும் வடக்கு/கிழக்குப் பகுதிகளோ அல்ல. அப்படியிருக்கும்போது எதை கெளதம சித்தார்த்தன் எதிர்ப்பார்க்கின்றார் என்றே தெரியவில்லை. போர் என்பது நமது கற்பனைகளுக்கு எவ்வளவு அப்பாற்பட்டவையோ அப்படியே அச்சூழலிற்குள் இருப்பவர்கள் வாழ்வும் நம்மால் சிநதித்தே பார்க்க முடியாத விசித்திரங்கள் நிறைந்தவையாக இருக்கின்றது. மிக மோசமான போர் நடந்த சூழலிற்குள் விஜய படம் பார்த்த சம்பவங்கள் முள்ளிவாய்க்கால் சூழலில் இருந்தவர்களால் பதியப்பட்டிருக்கின்றன. போரின் அழிவுகளைப் பார்த்தபின்னும், எதுவுமே இனி செய்வதற்கில்லை என்ற சூழலிலும் பலர் கேலியும் கிண்டலும் செய்து நாட்களை நகர்த்தியதை எழுதியிருக்கின்றார்கள். எனவே போர்ச் சூழல் என்பது சாத்தியமற்றதை எல்லாம் சாத்தியமாக்குகின்றது. இப்படியெல்லாம் இருந்திருக்க முடியுமா என எங்கள் சிந்தனைகளை எல்லாம் கேள்விக்குட்படுத்துகின்றன.

எனவே போர்ச்சூழலின் பின் மட்டுமல்ல, போர்ச்சூழலிற்குள் கூட ' கந்தசஷ்டிக் கவசமும் தமிழ் கும்தலக்கிடி பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உட்டாலக்கிடி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன' போன்ற சந்தர்ப்பங்கள் நிகழலாம். இதையெல்லாம் ஒரு காரணமாய்க் காட்டி இத்திரைப்படத்தை நிராகரிக்கவே முடியாது.

(3) "தமிழ்ப்பெண்ணின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் சிங்களராணுவ வீரன் என்னும் குறியீடு முழுக்க முழுக்க மேலோட்ட மான வெகுஜனப் பார்வை கொண்டது. இதைக் குற்றவுணர்வுகளின் அழகியல் என்கிறார். ஒரு இனத்தை மிகக் கொடூரமாகக் கொலை செய்த பிறகு குற்றவுணர்வுகளுடன் கூடிய சில சில நல்லிணக்கங்களையும் சமரசங்களும் செய்யும் காட்சிகளை உருவாக்குவதற்குப் பெயர்தான் குற்றவுணர்வுகளின் அழகியலா?"

 இத்திரைப்படத்தில் வரும் இராணுவத்தினன், தமிழ்ப் பெண்ணைக் கூட்டாய்ப் பாலியல் வன்புணர்வு செய்த நண்பனைத் தப்ப வைக்க பொய்ச்சாட்சி சொல்கின்றானே தவிர, அவன் அந்த நிகழ்வின் ஒரு பங்காளியல்ல. ஆனால் அதுவே அவனைப் பெரும் குற்றவுணர்ச்சியில் தள்ளுகின்றது. ஒருகட்டத்தில் இராணுவத்திலிருந்து நீங்க அந்த நிகழ்வே காரணமாகின்றது. ஆக இந்தப் படம் இன்னும் தமிழ் மக்களைக் கொன்றவர்களையோ, பாலியல் வன்புணர்வு செய்தவர்களின் ஆழமான பகுதியிற்குள்ளோ இறங்கவே இல்லை. மேலும் இப்படிப் பொய்ச்சாட்சி சொல்லிய இராணுவத்தினனை (கவனிக்க அவன் பாலியல் வன்புணர்வில் ஈடுபடவேயில்லை) மன்னிப்பதற்கே இன்னும் இந்தப் பெண்ணால் முடியவில்லை.

இத்தனைக்கும் இந்த பெண் வழியற்ற நிலையில் ஏதோ ஒருவகையில் உதவுகின்ற ஆணாகிய இவனையே அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதற்குள், இத்தகைய பேரழிவை நிகழ்ததிய இலங்கை அரசையோ, அதற்கு ஏதோ ஒருவகையில் மெளனித்து ஆதரவளித்த பெரும்பான்மை சிங்கள மக்களையோ ஏற்றுக்கொண்டு ஒன்றுபட்ட இலங்கையிற்குள் பாதிக்கப்பட்ட மக்களால் வாழமுடியுமா? என்ற கேள்வியைத்தானே பிரசன்னா நுட்பமாக எழுப்புகின்றார்.

(4) "ஒரு இனத்தைக் கொன்றொழித்துவிட்டு எஞ்சியவர்களை, ‘நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்கிறோம், நாம் அனைவரும் ஒரே மக்கள், வந்து எங்களுடன் சார்ந்து ஒன்று கலவுங்கள்..’ என்று ராஜபக்சே கூறுவதற்கும் விதானகே கூறுவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்: நாங்கள் குற்றவுணர்வில் இருக்கிறோம் என்று விதானகே வாக்குமூலம் கொடுப்பது மட்டும்தான்."

இப்படி எழுந்தமானமாய் கெளதம் சித்தார்த்தன் எழுதும்போது, தயவு செய்து இன்னொருமுறை 'உணர்ச்சி'களை அடக்கிவைத்துவிட்டு பொறுமையாகத் திரைப்படத்தைப் பாருங்கள் என்பதை விட சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

(5) இக்கட்டுரையில் இடையில் சட்டென்று To Kill a Mocking Bird நாவலை சித்தார்த்தன் கொண்டுவருகின்றார். குற்றவுணர்ச்சி என்ற ஒரு காரணமாய் இருக்கக்கூடும். அந்நாவல் எழுதப்பட்ட காலம் 1960கள். அதுவரை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த, அமெரிக்க கறுப்பின மக்கள் தமது உரிமைகள் கேட்டு  எழுச்சி பெறுகின்ற காலகட்டம். ஆதிக்க வெறி கொண்ட பெரும்பான்மை வெள்ளையின மக்களிடையே இருந்து வந்த ஒரு நம்பிக்கை கீற்றுத்தான் இந்த நாவல். இப்போது அதற்கான மதிப்பும், இடமும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அது தன் எல்லைக்குள் நின்று  அன்றைய காலத்தில் ஒரளவுக்கு உண்மையைப் பேசிய நாவல். எதுவுமற்றிருப்பவர்க்கு கிடைக்கின்ற சிறுதுளி வெளிச்சத்தின் அருமை தெரியும். ஆகவேதான் அதைக் கறுப்பின மக்கள் அந்தக்காலத்தில் முக்கியப்படுத்தினார்கள். பின்னர் கறுப்பின மக்களே தம் வாழ்வை தாமே எழுதும்போது இதற்கான முக்கியத்துவம் இல்லாமற் போவதும் இயல்பானதே. அவ்வாறே பிரசன்னாவும் எல்லாம் இழந்து நிற்கும் தமிழ் மக்கள் மீது தன் எல்லைக்குள் இருந்து ஒரு திரைப்படத்தை எடுக்கிறார். அதே சமயம் அவருக்கு தான் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவன் இல்லை என்பதும் நன்கு தெரிகிறது. எனவேதான் சோமீதரனின் பதிவில் பின்னூட்டம் இடும்போது, தமிழ்மக்களின் துயர் நன்கறிந்த சோமீயை திரைப்படம் எடுக்க உற்சாகப்படுத்துகின்றார்.

(6) "தமிழச்சி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறாள். ஆனால் சிங்களன் தமிழ் பேசுவதில்லை. இதுதான் பேரினவாதம். என் மொழிதான் நீ பேசப்பட வேண்டும் என்னும் Reconciliation. ‘அவன் அவள் மீது எல்லையற்ற காதல் கொண்டு தமிழ்மொழி கற்றுக் கொள்வது போல ஒரு காட்சி வைக்க முடியாதா? அப்படி வைத்தால் இக்கதையின் ‘கலைப் புனிதத்திற்கு பங்கம் நேர்ந்துவிடுமா? "

இதென்ன கொடுமை....சிங்களவருக்கு உண்மையான காதல் தொடக்கத்தில் இருந்தே இருக்கவில்லை (காதலிக்கும் உணர்விருந்தால் அவர் இத்தனை காலம் தனித்திருக்கவும் தேவையில்லை; அதே போன்று இயந்திரத்தனமாய் ரெஸ்லிங்கை முன்னர் பார்த்ததுபோல, திருமணத்தின் பின்னும் எவ்வித மாற்றமும் இல்லாதே பார்க்கிறார்). எனவே இவ்வாறான பாத்திரத்திற்கு எப்படி 'காதலை' ஊட்டமுடியும்? ஆதிக்க இனத்திற்குரிய மற்றும் ஆணுக்குரிய நீ என் இடத்திற்கு வரவேண்டுமே தவிர, நான் உன்னிடத்திற்கு வரமாட்டேன் என்கின்ற அடம்பிடிப்பில் எப்படி ஒரு சிங்களவர் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளப் போகின்றார். இதுதான் நடைமுறை யதார்த்தம். ஒருவேளை உண்மையான காதல் இருந்தால் ஒருவர் அப்படி தமிழைக் கற்று வரக்கூடும். ஆனால் இந்தப் பாத்திரம் அப்படிப்பட்டது அல்லவே. பிறகேன் அப்படி எதிர்ப்பார்க்க வேண்டும்?

(6) "அதேபோல, தமிழ்பெண்ணின் கதாபாத்திரமும் பெரும் முரண்பாடுடனேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. போரின்கொடூரமான தாக்குதலினால் சிங்கள இனத்தின் மீதான ஓயாத மன வெறுப்பாலும், கடும் வறுமையாலும் உழல்பவள். டக்கென்று ஒரு சிங்கள இனத்தவரை திருமணம் செய்து கொள்ள மனம் ஒப்பாது. அடுத்த நொடியே தனது உடலைக் கொடுத்துவிடும் அதிசயமும் நிகழாது. (அந்த உடலுறவுக் காட்சி வெளிப்படையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழின் மூன்றாந்தர மசாலா இயக்குனர்கள் கூட ‘கலை’யாக இக் காட்சியை வடிவமைத்திருப்பார்கள்) மேலும், தேசிய இன அரசியல் பேசும் அப்பெண்ணை ‘விஜய் படங்களின் ரசிகையாக’ மாற்றியிருப்பது பெரும் Irony யாக இருக்கிறது."

இது அடுத்து கெளதம் சித்தார்த்தன் செய்யும் நகைச்சுவை. அவளுக்கு வேறு தெரிவு இல்லையென்றுதான் இதை முடிவெடுக்கிறாள் என்றுதானே காட்சி காட்சியாக தன்னிடமிருக்கும் ஒவ்வொரு நகையாக அடகுவைப்பதை நிதானமாய் பிரசன்னா காட்டுகின்றார்.

உடல் சார்ந்த இயற்கையை எல்லாம் 'அரசியல்' செய்யக்கூடாது கெளதம சித்தார்த்தன்.

ஒரு பெண் ஆணுடன் முதன்முறை உடலுறவில் ஈடுபடும்போது உற்சாகமாகவும் ம்கிழ்வாகவும் இருப்பதைப் பார்த்து ஆண் இவள் இதற்கு முன் நிறைய அனுபவித்திருப்பாளோ என சந்தேகம் கொள்வதற்கும் நீங்கள் கூறுவதற்கும் என்னால் பெரிதாய் வித்தியாசம் காணமுடியவில்லை. அதைவிடக் கொடுமை 'தேசிய இன அரசியல் பேசும் அப்பெண்ணை ‘விஜய் படங்களின் ரசிகையாக’ மாற்றியிருப்பது பெரும் Irony யாக இருக்கிறது' என நீங்கள் கூறுவது. கொஞ்சம் விட்டால் தேசிய அரசியல் பேசும் ஒருவர் இயற்கைக் கடன்களைக் கூட கழிக்ககூடாது என்று கூறிவிடுவீர்கள் போலிருக்கிறது. என்னுடைய அச்சம் இப்போது என்னவென்றால், அஸின் இரசிகனாக இருக்கும் நான் எழுதும் இந்த எதிர்வினையையே அதை வைத்தே நீங்கள் நிராகரித்துவிடுவீர்களோ என்பதுதான்.

(7) "இந்தச் சூழலிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்குப் போவதுதான் ஒரே தீர்வாக முன் வைக்கிறார் விதானகே. அப்படியானால், ஈழத் தமிழர்களின் நலனுக்காக முன் நிற்கும் நாடு என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். ஈழத் தமிழர் நலன் சார்ந்த இந்திய வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும், தமிழ் நாட்டு வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும் எல்லோரும் அறிந்ததே. சமீபத்தில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் ஈழப் பெண்ணிற்கு ‘அகதி’ என்ற காரணத்துக்காக மருத்துவப் படிப்பு மறுக்கப்பட்ட அலட்சியம் தோய்ந்த பூமிக்கு வரத்தான் அவள் ஆசைப்படுகிறாள். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு NRI இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை அள்ளிக் கொடுக்கும் அரசு, தனது மொழி பேசும் அகதியை அலட்சியப்படுத்தும் புண்ணியபூமி தான் அவளுக்கு ஆறுதல் கொடுக்குமென எண்ணுகிறாள். ஏன் கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்குப் போவது பற்றி அவள் கனவு காணவில்லை?"

என்னுடைய ஞாபகம் சரியென்றால் (சென்ற வருடம் ஒரேயொரு முறைமட்டுமே படத்தைப் பார்த்தது) அவர்கள் இந்தியாவிற்குப் போவது கோயில்களைப் பார்ப்பதற்கு என்பதாகவே காட்சியிருக்கும். அவள் மனம் சோர்ந்து ஒடுங்கியிருப்பதைக் கண்டே ஆண் இந்த முடிவை எடுக்கிறார் (இந்தக் காட்சியில் ஆணுக்கு மெல்ல மெல்லமாக காதல் அரும்புவதைக் கூட அழகாக பிரசன்னா எடுத்திருப்பார்). எனவே சித்தார்த்தன் முன்வைக்கும் பெரும் 'பூகோள அரசியல்' எல்லாம் இங்கு எடுபடாது.

அவ்வாறே சித்தார்த்தன் சொல்வதுபோல இந்தியாவிற்குப் போவதாய் இருந்தால் கூட, ஏன் கனடா, இங்கிலாந்து போகக் கேட்கவில்லை என்று கேட்பது இன்னும் அபத்தம். எனெனில் அவர்களிடம் அவ்வாறு போவதற்கான எந்தப் பணமும் இல்லை என்றுதானே படம் முழுக்கக் காட்டப்பட்டிருக்கிறது. நகைக்கடையை விற்றுவிட்டுத்தானே இந்த இந்தியப் பயணமே சாத்தியமாகிறது. கனவு வேண்டுமானால் அந்தப் பெண் 'ஒரு சனியனும் வேண்டாம் என்று செவ்வாய்க் கிரகத்திற்கு போவதாய்க் கூட காணலாம். ஆனால் யதார்த்த்தில் (கதையின் நீட்சியில்) அவர்களால் இந்தியாவிற்குப் போவதே சாத்தியமான ஒரே வழி.

(8) "ஆனாலும் இறுதிக் காட்சியில் அவருக்குள்ளிருக்கும் தார்மீகமான போராளி விழித்துக் கொள்கிறான். தன் இனத்தை அழித்தொழித்தவர்களுடன் இணைந்து அல்லது சார்ந்து வாழவே முடியாது என்பதையும் இலங்கை அரசு பிரச்சாரம் செய்யும் நல்லிணக்கம் குறித்த பார்வைகளையும் கேள்விக்குள்ளாக்கி தமிழ்ப்பெண் செல்வியை தற்கொலை செய்ய வைக்கிறார்."

ம்...இறுதியாக நானும் கெளதம் சித்தார்த்தனும் உடன்படும் ஒரு புள்ளிக்கு வந்துவிட்டோம். ஹொந்தாய்.

ஆனால், பிறகு பழையபடி வேதாளம்...

(9) "சிங்களரோடு சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் இல்லையெனில் சாவதைத் தவிர வேறு வழியில்லையென்ற விமர்சனம் இதற்குள் கட்டமைகிறது.

அவர் இன்னும் சற்று விசாலமாக யோசித்திருந்தால், தமிழ்ப் பெண்ணைச் சாகடிக்காது, அவனிடமிருந்து பிரிந்து, தனது நிலத்தில் சுதந்திரமாக அவள் விரும்பும் ‘விஜய் பாடல்களுடன்’ கொண்டாட்டமாக வாழ வைத்திருக்கலாம்."

அந்தப் பெண்ணிற்கு தனியே வாழும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருந்தால், அவள் ஒருபோதும் ஒரு சிங்களவரையே மணந்திருக்க முடியாது. அவளுக்கு வேறு தெரிவுகளில்லலாதுதானே சிங்களவரை மணக்கிறாள் எனத்தானே படத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

அந்தப் பெண்ணிற்கு கடந்தகாலத்தை முற்றாக மறக்க முடியுமென்றால், அவளால் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சிங்களக் கணவனோடு வாழ முடிந்திருக்கும்.

அதேபோல, அவனைத் துறந்துவிட்டு தனியே விஜயின் பாட்டுக்களோடு கொண்டாட்டமாய் வாழ முடியுமென்றால், அவனை விலத்தித் தனியே வாழ முடிந்திருக்கும். ஆனால் அவளால் இந்த இரண்டையும் தேர்ந்தெடுக்க முடியாது என்பதாலேயே அவள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றாள்.

இதுதான் இன்று ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலையல்லவா? இதைவிட எப்படி அப்பட்டமாய் இன்றைய சூழலைக் காட்ட முடியும்? இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழர்களால் முற்றுமுழுதாக கடந்த காலத்தை மறந்துவிட்டு வாழ முடியாது. அதேபோல, சிங்களவர்கள் பெரும்பான்மையான ஒரு நாட்டில் தனித்துப் பிரிந்துபோவதற்கான எந்த சிறு சமிக்ஞைகளும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. ஆக இந்தப் பெண் தேர்ந்தெடுத்த தற்கொலையைப் போலத்தான் மிகவும் சிக்கலான காலத்தில்  தமிழர்கள் இன்று ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அல்லவா?

கெளதம சித்தார்த்தன் இப்படியும் சிந்தித்தும் பார்க்கலாம்.

மற்றும்படி  இதில் அவர் அஷோக ஹந்தகமவின் 'இனி அவன்' படத்திற்கு வைத்த விமர்சன்ம் உள்ளிட்ட தமிழ்மக்கள் மீது அக்கறையின் பாற்பட்டு வைக்கப்பட்ட கருத்துக்கள் எனக்கு உடன்பானதே.  ஆனால் இத்திரைப்படத்தை நான் சித்தார்த்தனின் பார்வையினூடாகப் பார்க்கவில்லை என்பதற்காகவே இந்தக் குறிப்பு.

ஈழத்திலுள்ளவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லாத இன்றைய சூழ்நிலையில் -நான் ஏற்கனவே கூறியதுபோல- பிரசன்ன விதானகேயின் கரங்களைக் கோர்த்து நடக்கவே விரும்புகின்றேன். அதுவும் நான் நம்பிக்கை வைத்த விமுத்தி ஜெயசுந்தரா ('இரண்டு உலகங்களுக்கிடையில்' படம் பற்றிய பார்வையும் 'உன்னத்திற்கே' எழுதியிருக்கின்றேன்) போன்றவர்களே இன்று 'இலங்கையிற்கு வாருங்கள்' என் இலங்கையரசு சார்பாய் சுற்றுலாப் படங்களை எடுக்கும் காலத்தில் பிரசன்னா போன்றவர்கள் மின்மினிப்பூச்சிகள் என்றாலும் அவர்களின் பறத்தல் எனக்கு முக்கியமானது.


கெளதம சித்தார்த்தனின் கட்டுரை:(http://www.keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/26915-2014-08-01-06-14-16)  

(August 13, 2014)

0 comments: